Monday, April 30, 2012

உபயோகமான வலைத்தளங்கள்-3 : இரத்ததானம்

இரத்ததானம் என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம்

நோயாளிகள், அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்கள், விபத்தில் சிக்கிக் கொண்டு உடனடி சிகிச்சை கொள்ள துடிப்பவர்கள் அனைவருக்கும்  இரத்தம் ஓர் உடனடித் தேவையாகும். இது போன்ற சூழ்நிலைகளில் உதவ தன்னார்வத் தொண்டர்கள் பலர் ( நானும் இந்த தளத்தில் உறுப்பினர் தான்) உள்ளனர். ஆனால் அவசர காலத்தில் உடனடியாக அவர்களை தொடர்பு   கொள்ள  முடிவதில்லை.  இவர்களின் கைபேசி எண்களை  சேகரித்து  வைத்துள்ள  சேவை மையங்களின் மூலம்  தொடர்பு கொள்வதற்குள் காலதாமதம் ஏற்படுகிறது.

இதனைத் தடுக்கவே http://www.friends2support.org/   என்ற இணைய தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளம் சென்றால் இங்கு இரத்த வகை வாரியாக, தன்னார்வலர்களின் முகவரி கிடைக்கிறது. எந்த இடத்திற்கு இவர்கள் வர வேண்டும் எனக் குறிப்பிட்டால், உடனே அந்த இடத்திற்கு அருகே உள்ளவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் தரப்படுகின்றன. இந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு நாம் நேரடியாகவே இரத்தக் கொடையாளிகளுடன் பேசி அவர்களை வரவழைக்கலாம்.


அவர்கள் கொடுத்துள்ள தொலைபேசி எண்கள் இயங்கவில்லை என்றால், உடனே இந்த தளத்திற்குத் தகவல் தெரிவிக்கலாம்,. அவர்கள் சார்ந்தவர்களைத் தொடர்பு கொண்டு சரியான தொலைபேசி எண்களைப் பெற்று, தளத்தில் அப்டேட் செய்கின்றனர்.   சேவை நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள மிகவும் உபயோகமான இணையதளம் இது.


Sunday, April 29, 2012

பிஸினஸ் ஐடியா இருக்கு, ஆனா முதலீடு இல்லை.

பிஸினஸ் ஐடியா இருக்கு, ஆனா முதலீடு இல்லை. வங்கி கடன் தருமா?


நம்மில் பெரும்பாலோனருக்கு பிசினஸ் பண்ணும் ஆசை இருக்கும். ஆனால் ரிஸ்க் எடுக்க தைரியம் இல்லாத காரணத்தாலோ அல்லது முதலீடு செய்ய கையில் பணம் இல்லாத காரணத்தாலோ அந்த முயற்சி தொடங்கப்படாமலே போய்விடும். தன்னம்பிக்கையும், ரிஸ்க் எடுக்கும் தைரியமும் உள்ளவர்களே வாழ்க்கையிலும், பிசினசிலும் சாதிக்கிறார்கள்.

20 வருடங்களுக்கு முன், நம் நாட்டில் தொழில் தொடங்குவது எளிதான காரியம் அல்ல. ஆனால் இப்பொழுது அரசாங்கமே தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கிறது. நம்மிடம் நல்ல ஐடியா இருந்து முதலீடு மட்டும் இல்லையென்றால் உதவ முதலீட்டு நிறுவனங்கள் உள்ளன. இது பற்றிய மற்றொரு பதிவு (http://thinkbig360.blogspot.in/2012/04/blog-post_17.html) வங்கிகளின் மூலமும் கடன் பெறலாம். வங்கிகள் கடன் தர நம்மிடம்  சில தகுதிகளை எதிபார்க்கும்.


 பொதுவாக வங்கிகள் தொழில் முனைவோரிடமிருந்து  இருந்து நான்கு விஷயங்களை எதிர்பார்க்கும். இவற்றை 4C என்று  கூறுவார்கள்.

மூலதனம்.( Capital )

 தொழில் முனைவோரிடம் இருக்கும் மூலதனத்தை வைத்துதான் அவருக்கு எவ்வளவு கடன் கொடுக்கலாம் என்பதை வங்கி முடிவு செய்யும். குறைந்தது 10 முதல் 50 சதவிகிதம் வரை தொழில் முனைவோரிடம் மூலதனம் இருக்க வேண்டும்.


வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்கும் திறன்.( Capacity )

தொழில்முனைவோரிடம் இருக்கும் பிஸினஸ் பிளான். என்ன தொழில் செய்யப் போகின்றார் , எப்படி செய்யப்போகின்றார்  , போட்டியாளர்கள் இருக்கிறார்களா, என்ன மார்க்கெட் இருக்கிறது, என்ன லாபம் கிடைக்கும், அவருடைய முன் அனுபவம் என்ன என்பதையெல்லாம் உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.

குணநலன்.( Character )

தொழில் முனைவோர் யார், என்ன படித்திருக்கின்றார் , நம்பி கடன் கொடுக்கலாமா, வேறு ஏதாவது ஒரு வங்கியிலிருந்து கடன் வாங்கி அதைத் திரும்பக் கொடுக்காமல் போயிருக்கின்றாரா?, வழக்குகள் இருக்கிறதா?, அவரை  யார் அறிமுகம் செய்கிறார்கள் போன்ற  விஷயங்களையும் கவனிப்பார்கள்.

அடமானம்.( Collateral Security )

வாங்கும் கடனுக்கு ஈடாக அடமானம் கொடுக்கும் வகையில் தொழில் முனைவோரிடம் ஏதேனும் சொத்து இருக்கவேண்டும்.

மேற்சொன்ன நான்கு விஷயங்களிலும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்து, வங்கிகள் கேட்கும் மற்ற சில சான்றுகளையும் ( வருமானவரிச் சான்று )கொடுத்து விட்டால் , கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு.

Saturday, April 28, 2012

உபயோகமான வலைத்தளங்கள்-2: இலவச மின்னூல்கள்


உங்களில் சிலருக்கு இந்த தளத்தைப பற்றி தெரிந்திருக்கலாம். ஆன்லைனில் உள்ள சிறந்த மின் நூல் நூலகம் இது. இதன் இணைய முகவரி http://booksbuddies.com/ நீங்கள் தன்னம்பிக்கை நூல்களை விரும்பி படிப்பீர்களா? ஆம் எனில் இந்த தளம் உங்களுக்கு உதவும்.


இந்த தளத்தில் இலவசமாகத் தரப்படும் நூல்கள் அனைத்தும் தன்னம்பிக்கையை ஊட்டும் நூல் களாகும். தன்னார்வத்துடன் பல துறைகளில் வளரத் துடிப்பவர்கள் தங்கள் இலக்குகளை எப்படி அமைக்க வேண்டும், எப்படித் திட்டமிட வேண்டும், சோம்பலைப் போக்கி, தளர்ச்சியை நீக்கி எவ்வாறு முன்னேற வேண்டும் என வழி காட்டும் பல நூல்கள் இங்கு உள்ளன.

இதில் உறுப்பினராகி நூல்களை இலவசமாக தரவிறக்கம் செய்திட மேலே தரப்பட்டுள்ள இணையப் பக்கம் சென்று, அங்கு உங்கள் விவரங்களை பதிவு செய்து கொண்டால் அதில் ஏற்கனவே தயாரான  வாசகத்துடன் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்திட ஒரு லிங்க் கிடைக்கும். இதனை அப்படியே உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும். அதில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்து உங்கள் நண்பர்களும் இது போல பதிந்து கொள்ளலாம். உங்கள் லிங்க் எதற்காகவென்றால், இந்த தளத்தில் பதிவு செய்து கொண்ட வுடன், இங்கு உள்ள நூல்களில் நான்கினைத்தான் நம்ம்மால் தரவிறக்கம்  செய்திட முடியும். உங்கள் நண்பர்கள், உங்கள் லிங்க் மூலம் பதிந்து கொண்டால், ஒவ்வொரு நண்பர் பதிவு செய்கையில், உங்களுக்கு மேலும் சில நூல்கள் தரவிறக்கம் செய்திட அனுமதி கிடைக்கும்.

நீங்கள் பதிவு செய்து கொள்ள விரும்பினால், எனது இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டுகிறேன். இதன் மூலம்  நானும் சில நூல்களை இலவசமாக பெறுவேன். எனது இணைய முகவரி  http://http//booksbuddies.com?ref=viswa75 இந்த தளத்தில் உள்ள இன்னொரு வசதி, பதிந்து கொண்டுள்ள நண்பர்களுடன் சேட் செய்திடலாம். நல்ல விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம்.

தொழில் வாய்ப்பு : 

எனக்கு தெரிந்து தமிழில் இது போன்று நூலகம் (ரெபரல் முறையில் இயங்கும் ) இருப்பதாக தெரியவில்லை. நாமும்  இது போன்று இணைய தளம் தொடங்கி நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் தலைவர்களின் நூல்களை பகிர்ந்து கொள்ளலாம் அல்லது மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யலாம். இணைய தளத்தில் விளம்பரங்களை இடம் பெற செய்வதன் மூலமும் வருமானம பெறலாம்.

உங்களது மேலான கருத்துகளை தெரிவிக்கவும். நன்றி.

Friday, April 27, 2012

உபயோகமான வலைத்தளங்கள்-1 சுருக்கிய வலைதள முகவரி


மின்னஞ்சல் மூலம் வலைதள முகவரியை ( யு.ஆர்.எல்.)அனுப்புவது எல்லோரும் செய்யக்கூடிய ஒன்றுதான். இதில் உள்ள அபாயம் என்னவென்றால், வலைத்தள முகவரி மிகவும் நீளமாக இருந்தால், முகவரி உடையக்கூடிய ( Break ) வாய்ப்பு அதிகம். உடைந்த முகவரியிலிருந்து, சரியானதைப் பெறுவதும் சற்று சிரமம். நீளமான யு.ஆர்.எல். முகவரியை சுருக்கி சிறியதாக்க ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரி http://tinyurl.com/




மிகப் பெரிய நீளமான இணைய தள முகவரிகளைச் சுருக்கி தரும் லிங்குகள் வழியாக மால்வேர்கள், வைரஸ்கள் நுழைவதற்கு வாய்ப்பு அதிகம். சுருக்கமாகத் தரப்பட்டுள்ள யு.ஆர்.எல். முகவரிகள், எதனைக் குறிக்கின்றன என்று அறியாமலேயே, நாம் அவற்றின் மீது கிளிக் செய்து மாட்டிக் கொள்கிறோம். இதிலிருந்து தப்பிக்க ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரி http://longurl.org/ இந்த தளத்தில் நாம் எந்த ஒரு சுருக்கப்பட்ட இணைய முகவரியையும் தந்து, அது தீங்கு விளைவிக்கக் கூடியதா என அறிந்து கொள்ளலாம்.



மேலும் சில உபயோகமான வலைத்தளங்களை அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

Thursday, April 26, 2012

ஹார்டு டிஸ்க்கில் இடம் இல்லையா?

நவீன கணினி உலகில் ஹார்டு  டிஸ்க்-குகளின் வளர்ச்சியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே வருகின்றன. முன்பெல்லாம் ஹார்டு  டிஸ்க்-குகளின் அளவு ஜிபியில் (GB ) வந்து கொண்டிருந்தது. தற்கால கணினிகள் டிபி ( TB ) எனப்படும் டெராபைட் அளவுகளில் வருகின்றன. தற்போது ஹார்டு  டிஸ்க்-குகளின் விலையும் பல மடங்கு கூடி விட்டது.

ஹார்டு  டிஸ்க்-குகளில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அவற்றை சரி செய்வதும் சற்று சிரமமான காரியம். பாதிப்புகுண்டான ஹார்டு  டிஸ்க்-குகளில் உள்ள கோப்புகளை திரும்பப் பெற நிறைய மென்பொருள்கள் இருந்தாலும், நமது கணினியில் அந்த ஹார்டு டிஸ்க் அறியப்பட்டால் ( detect ) மட்டுமே டேட்டாவை/கோப்புகளை ரெக்கவரி செய்ய முடியும். கணினியால் அறியப்படாத ( detect )  ஹார்டு  டிஸ்க்-கை அறியச் செய்ய எந்த மென்பொருளும் கண்டு பிடிக்கப் படவில்லை.

இப்படி பழுது ஏற்பட்ட ஹார்டு டிஸ்க்கில் நன்கு தேவையான முக்கியமான கோப்பு இருந்தால் ரெக்கவரி செய்ய ஹார்டு டிஸ்க்கை கழற்றினால் மட்டுமே  முடியும். இதற்கு தமிழ் நாட்டில்  100 எம்பிக்கு சுமார் 30 ,000 முதல் 40 , 000 வரை செலவாகும். எனவே புதிதாக ஹார்டு டிஸ்க் வாங்குவதற்கு பதில் இணையத்தில் சேமித்து வைப்பது நல்லது.

இதன் மூலன் நமக்கு வேண்டிய கோப்புகளை மிகவும் பாதுகாப்பாக வைத்திட முடியும். கோப்புகளை இன்னொரு கணினிக்கு மாற்ற பென்டிரைவையோ அல்லது எக்ஸ்டெர்னல் ஹார்டு டிஸ்க்-கையோ பயன் படுத்த வேண்டியது இல்லை. இணையத்தின் மூலம் எளிதாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

கோப்புகளை ஆன்லைனில் சேமித்து வைக்க பல கிளவ்டு ( cloud ) சேமிப்பு சேவைகள் உள்ளன. இவற்றில் கோப்புகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பத்திரமாக சேமிக்கப் படும். எளிய ட்ராக் அன்டு டிராப் முறையில் பைல்களை/கோப்புகளை சேமிக்க முடியம்.அவைகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

அமேசான் க்ளவ்டு டிரைவ் : 



  • 5GB வரையிலான டேட்டா சேமிப்பு இலவசம். அமேசான் மியுசிக் ஸ்டோரில் இருந்து வாங்கப்படும் கோப்புகளுக்கு சேமிப்பு இலவசம்
  • 5GB க்கு மேல், ஒவ்வொரு 1GB - க்கும், ஆண்டுக்கு 1 $ செலுத்த வேண்டும்.
  • வலைத்தள முகவரி: https://www.amazon.com/clouddrive/learnmore
மைக்ரோசாப்ட் ஸ்கை டிரைவ் : 



  • 7GB வரையிலான டேட்டா சேமிப்பு இலவசம்.இந்த சேவையை பயன்படுத்த ஒரு விண்டோஸ் லைவ் ஐடி போதுமானது.
  • 7GB க்கு மேல், ஒவ்வொரு 1GB - க்கும், ஆண்டுக்கு 0.5 $ செலுத்த வேண்டும்.
  • ஒரு பைலின் சைஸ் 3GB க்கு மேல் இருக்கக் கூடாது
  • வலைத்தள முகவரி: https://skydrive.live.com/
ட்ராப் பாக்ஸ் :


  • 2GB வரையிலான டேட்டா சேமிப்பு இலவசம்
  • புதிதாக ஒருவரை இதில் இணைய செய்வதின் மூலம் 250MB இலவசமாக பெறலாம். இது 10GB க்கு மேல் உயராது.
  • 2GB க்கு மேல், ஒவ்வொரு 100GB - க்கும், ஆண்டுக்கு 200 $ செலுத்த வேண்டும்.
  • வலைத்தள முகவரி: https://www.dropbox.com/
பாக்ஸ் :


  • 2GB வரையிலான டேட்டா சேமிப்பு இலவசம்
  • தனிப்பட்ட கணக்குகுகளுக்கு, ஒரு மாதத்திற்கு 9 .99 $ ( 25GB ), வணிக நிறுவனங்களுக்கு, ஒரு மாதத்திற்கு 15 $ ( 50GB )
  • வலைத்தள முகவரி: http://www.box.com/
கூகுள் ட்ரைவ்  :


  • 5GB வரையிலான டேட்டா சேமிப்பு இலவசம்.இந்த சேவையை பயன்படுத்த ஒரு கூகுள்  ஐடி போதுமானது.
  • மிக சமீபத்தில் வெளிவந்த க்ளவ்டு சேவை இதுவே.
  • ஒரு வருடத்திற்கு  30 $ ( 25GB ),   60$ ( 100GB )
  • ஒரு பைலின் சைஸ் 10GB க்கு மேல் இருக்கக் கூடாது.
  • வலைத்தள முகவரி: https://drive.google.com/start
ஆப்பிள் ஐ க்ளவ்டு   :


  • 5GB வரையிலான டேட்டா சேமிப்பு இலவசம்.
  • ஒரு வருடத்திற்கு  40 $ ( 20GB ),   100$ ( 50GB )
  • பைலின் சைஸ்-க்கு எல்லை எதுவும் இல்லை.
  • வலைத்தள முகவரி: http://www.apple.com/icloud/get-started

Wednesday, April 25, 2012

வெற்றிக்கு ஒரு புத்தகம் - இட்லியாக இருங்கள்

'இன்டர்வியூக்களில் அமர்க்களமாகத்தான் பதில் சொல்கிறேன் . ஆனாலும் ஏன் வேலை கிடைக்கமாட்டேன் என்கிறது?'

'அலுவலகத்தில் என் அளவுக்குப் பொறுப்பாகச் செயல்படக் கூடியவர் வேறு யாருமே இல்லை. இது நிர்வாகத்துக்கும் தெரியும்! ஆனாலும் எனக்கு  உரிய பதவி உயர்வுகள் ஏன் தாமதமாகின்றன? '

'வீட்டுக்கு போறதுன்னாலே வெறுப்பா இருக்கு, என் பேச்சுக்கு வீட்ல மரியாதையே இல்ல'



 இந்த மாதிரி புலம்பல்களை நீங்கள்  கேட்டிருக்கலாம், அல்லது நீங்களே கூட புலம்பியிருக்கலாம், 'இட்லி' எனப்படும் 'எமோஷனல் இன்டலிஜென்ஸ்' திறமையின்மையே இதெற்கெல்லாம் காரணம் என்பதை ஆசிரியர் நிறைய எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகின்றார். 

ஒருவர் படிப்பிலும், அறிவிலும் சிறந்து விளங்கினால் அவரை இன்டெலிஜென்ட் என்று சொல்கிறோம். 25 ஆண்டுகளுக்கு முன் வரை கூட, IQ (Intelligence quotient) தான் ஒருவரின் வெற்றியை தீர்மானிக்கின்றது என்றே நம்பப் பட்டு வந்தது. ஆனால் மேலை நாட்டினரின் ஆராய்ச்சி முடிவுகள்,

ஒரு மனிதனின் வெற்றியில் புத்திசாலிதனத்தின் பங்கு வெறும் 20 சதவிகிதம் என்றும், வேறு பல காரணங்கள் 80 சதவிகிதம்  என்று கூறுகின்றன.

அந்த 80 சதவிகிதத்தில் மிக முக்கியமான சதவிகிதத்தை பெற்றிருப்பது எமோஷனல் இன்டலிஜென்ஸ் எனப்படும்  ' தன்னையும் தன் உணர்சிகளையும்  திறம்பட நிர்வகித்துக் கொண்டு, பிறருடைய உணர்சிகளையும் புரிந்து கொண்டு நடக்கும் திறன்'  சுருக்கமாக சொல்வதென்றால் 'உணர்சிகளை கட்டுப்படுத்துவது' .

எந்த உணர்ச்சியையும் அடக்கு என்று சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. இயற்கையாக நமக்கு வருகின்ற உணர்சிகள் அனைத்தும் நம் வாழ்க்கைக்கு வண்ணம் சேர்ப்பவை தான். உணர்சிகளை வெளிக்காட்ட தெரியாவிட்டால் நம்மை ஜடம் என்று கூறி விடுவார்கள். அவை கொஞ்சம்  கூடுதலாகவோ குறைவாகவோ ஆகும்போதுதான் பிரச்சனை வெடிக்கிறது.

விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், திரைத்துறையினர் போன்ற பிரபலங்கள் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொண்ட நிகழ்வுகளையும் விளக்குகின்றார்.

  • குத்து சண்டை போட்டியில் மைக் டைசன் ஹோலி பீல்டின் காதை கடித்தது.
  • கிரிக்கெட் போட்டியில் மியாண்டட் கிரண் மோரேவை வெறுப்பேற்றியது.
  • டாக்டர் செரியன் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டது.
  • மணிரத்னம் அவர்களின் அண்ணன் தயாரிப்பாளர் ஜி.வி தற்கொலை செய்து கொண்டது.
இது போன்று பல எடுத்துக்காட்டுகள் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் மற்றொரு சிறப்பு, இக்கட்டான சூழ்நிலைகளில், உணர்சிகளுக்கு இடம் கொடுக்காமல் எப்படி முடிவுகள் எடுப்பது என்பதை குட்டி கதைகளின் (Case Studies ) மூலம் விளக்கப்பட்டுள்ளது.

மனித மூளையின் அமைப்பும், நம் உணர்சிகளுக்கும் ளைக்கும் உள்ள தொடர்பும் அறிவியல் பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது. இது ஒரு தன்னம்பிக்கை நூல் மட்டுமல்ல, நமது உணர்சிகளுக்கான காரணங்களை அலசி ஆராயும் உளவியல் நூலும் கூட.

எமோஷனல் இன்டலிஜென்ஸ் குறித்து தமிழில் வெளிவரும் முதல் நூல் இதுவே. தனிப்பட்ட வாழ்க்கையிலும், பணிபுரியும் இடத்திலும், சில நேரங்களில் உணர்சிகளை கட்டுப்படுத்த தவறி  விடுகிறீர்களா? அப்படியானால் இந்த புத்தகம் உங்களுக்கானது.

  • நூலின் பெயர் : இட்லியாக இருங்கள்
  • ஆசிரியர் : சோம. வள்ளியப்பன்
  • பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்

Monday, April 23, 2012

உங்களது நேரத்தை சரியாக செலவிட வேண்டுமா?


தினசரி காலையில் எழுந்தவுடன் நாம் செய்யும் வேளைகளில் ஒன்று அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகளை குறித்து வைத்துக் கொள்வது. இதற்கு To Do List என்று பெயர். வழக்கமாக துண்டு காகிதம், நாளிதழ்களின் ஓரம், கல்யாண பத்திரிக்கையின் ஓரம் என்று எழுதி வைத்துக் கொள்வோம். லோஞ்சம் ஒழுங்காக இருப்பவர்கள் ஒரு நோட்டு போட்டு குறித்து வைத்துக் கொள்வார்கள். அதுவே நீங்கள் பெரிய நிறுவனமொன்றின் அதிகாரியாக இருந்தால் உங்கள் உதவியாளர் ஒரு டைரி போட்டு மணிக்கு மணி உங்கள் அப்பாயின்ட்மென்ட் ஐ குறித்து வைத்திக் கொள்வார்.

எப்படியானாலும் எல்லோருக்கும் ஒரு அட்டவணை இருக்கின்றது. அதைப் பின்பற்றுகிறோமோ இல்லையோ குறித்து வைத்துக் கொள்ளவாவது விரும்புகிறோம். இப்போது ஆன்லைனில் இந்த 'To Do List 'ஐ உருவாக்கலாம். அதில் சிறப்பாக உள்ள இணையதளம். http ://voo2do .com

'Voo2Do' வில் இலவசமாக பதிவு செய்து கொண்டு, நாம் ஈடுபட்டுள்ள பிராஜெக்டுகளின் விவரங்கள், தேதிகள் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொண்டால் போதும். ஒவ்வொரு வேலையையும் செய்து முடிக்க எவ்வளவு நேரம் ஆயிற்று, இன்னும் எத்தனை நாட்களில் முடிக்க வேண்டும் என்றெல்லாம் இந்த லிஸ்டில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

இதே போன்ற சேவையை வழங்கும் பிற வலைத்தளங்கள்:

http://www.tadalist.com/


http://rememberthemilk.com/


உங்களுக்கு வேறு சில வலைத்தளங்கள் தெரிந்திருந்தாலும் பகிர்ந்து கொள்ளவும்.

Sunday, April 22, 2012

நேரத்தை சேமிக்க உதவும் 3 எளிய இணையதள மென்பொருள்கள்.

நேரத்தை சேமிக்க  உதவும் 3 எளிய இணையதள மென்பொருள்கள்.

இன்றைய கால கட்டத்தில் ஏராளமான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன. இப்பொழுது அவற்றை எல்லாம் தரவிறக்கம் செய்து உபயோகப்படுத்த வேண்டியதில்லை. ஆன்லைனிலேயே உபயோகப்படுத்த முடியும். கீழே குறிப்பிட்டுள்ள 3 மென்பொருள்கள், உபயோகப்படுத்த மிகவும் எளிமையானவை.

Ninite

ஒரு புதிய கம்ப்யுட்டருக்கு தேவையான மென்பொருள்களை நிறுவுவது சற்று சிரமமான வேலை . சிலநேரங்களில் எட்டு மணி நேரத்திற்கும் மேல் நேரம் செலவு செய்ய வேண்டியிருக்கும். முதலில் தேவையான மென்பொருள்களை தரவிறக்கம் செய்ய வேண்டும், பின்னர் அவற்றை ஒவ்வொன்றாக நிறுவ வேண்டும். எல்லா மென்பொருள்களும் ஒரே இடத்தில் கிடைத்தால் வசதிதானே?


Ge.tt

இணையத்தில் அட்டாச்மென்ட்களை மற்றவர்களுடன் பகிந்து கொள்ள எளிய வழி இதோ. Ge.tt இந்த தளத்தில் பெரிய பைல்களை மிக எளிதாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.



 
இந்த தளம், பைல் கர்வெர்சனுக்கு மிகவும் உதவும். குறிப்பிட்ட மென்பொருள் நம்மிடம் இல்லாவிட்டால் நம்மால் சில பைல்களை திறக்க முடியாது. பைலை ஒரு பார்மேட்டிலிருந்து மற்றொரு பார்மேட்டிற்கு மாற்ற இந்த இணைய தளம் உதவும்.
 
இது போன்ற மற்ற தளங்கள் உங்களுக்கு தெரிந்தால் தயவு செய்து கீழே தெரிவிக்கவும், மற்றவர்களுக்கும் உதவும்.
 

Thursday, April 19, 2012

வெற்றிக்கு ஒரு புத்தகம் - வானமே எல்லை (Simply Fly)

நான் பொதுவாக ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்படும் புத்தகங்களை விரும்பி படிப்பதில்லை,  எழுத்துக்கள் தமிழில் இருந்தாலும் மொழி பெயர்ப்பு நூல்கள் எனக்கு அந்நியமாகவே தோன்றும். அனால் இந்த புத்தகம் நேரடியாக தமிழிலேயே எழுதப்பட்டது போன்று ஒரு தெளிவு. மிகச் சிறப்பாக மொழி பெயர்த்த திரு BR மகாதேவன் அவர்களுக்கு முதலில் ஒரு 'சல்யூட்'

'முன் எப்போதும் இல்லாத வாடிக்கையாளர்களையும், புதிய சந்தையையும் உருவாக்கி அதன் மூலம் செல்வம் சேர்ப்பவரே உண்மையான தொழில் முனைவர்' ன்னு சொல்றத கோபிநாத் அவர்களின் வாழ்க்கை நிருபித்து காட்டியிருக்கிறது. சாகசங்களையும், சவால்களையும் எதிகொள்ள துளியும் பயப்படாத துணிச்சலான செயல் வீரரின் கதை தான் இந்த புத்தகம்.

 'வானத்தை லட்சியமா வை, பூமிய பார்த்து நட'ன்னு  சொல்லுவாங்க, அப்படி வாழ்ந்து காட்டிய செயல் வீரர் தான் இந்த கோபிநாத். சாதாரண மனிதர்களுக்கு எட்டாத பல சாகசங்களை நடத்தி காட்டியிருக்கிறார். இவர் ஆரம்பித்த குறைந்த கட்டண விமான சேவை (Air Deccan) இந்திய வான் போக்குவரத்தையே அடியோடு மாற்றியமைத்து.

 சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில், ஒரு ஆசிரியருக்கு மகனாக பிறந்த கோபிநாத் இந்திய இராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார். பால்  பண்ணை, பட்டு பூச்சி வளர்ப்பு, மோட்டார் பைக் ஏஜென்சி, ஹோட்டல் தொழில், பங்கு சந்தை தரகர் என்று பல தொழில்களை செய்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் தேவ கவுடாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியையும் தழுவியிருக்கிறார். தான் வாழ்க்கை முழுதும் புது புது முயற்சிகளை சலிக்காமல் செய்துள்ளார்.

தலைமை பதவியில் இருப்பவர்களுக்கு முடிவெடுக்கும் திறன் முக்கியம்னு சொல்லுவாங்க, ஆனால் கோபிநாத், மிகப்பெரிய முடிவுகளையெல்லாம் மின்னல் வேகத்தில்  எடுத்து சாதித்து கட்டியிருக்கிறார். நீங்கள் ஏதாவது புதுசா சாதிக்கணும்னு நினைக்கிறிங்களா? அடி மேல் அடி விழுதா? சோர்ந்து போய் விட்டீர்களா? இந்த புத்தம் உங்களுக்கு ஒரு நல்ல புத்துணர்ச்சியைத்  தரும்.

தொழில் முனைவோருக்கு வேண்டிய தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தலைமைபண்பு, முடிவெடுக்கும் திறன் போன்ற பல பாடங்கள் இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் ' கல்லூரிகளில் இந்த புத்தகத்தை பாடமாக வைக்க வேண்டும்' என்கிறார் நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.

ஒரு சாதாரண ஆசிரியருக்கு மகனாக பிறந்த, ராணுவத்தில் இருந்து வெளியே  வரும்போது ரூபாய் 6 ,000  மட்டுமே செட்டில்மென்ட் பணமாக பெற்ற கோபிநாத், அதிக மூலதம் தேவைப் படக்கூடிய விமான சேவையை எப்படி ஆரம்பித்தார், எப்படி சாதித்தார் என்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியானால் இந்த புத்தகம் உங்களுக்கானது.

ஒவ்வொருவரும்  வாழ்வில் ஒருமுறையேனும் படிக்க வேண்டிய சாதனை சரித்திரம் இந்த 'வானமே எல்லை'

Wednesday, April 18, 2012

பிஸினஸில் ஜெயிக்க 10 விஷயங்கள்!



வெற்றி என்பது நொடியில் வந்து சேரும் விஷயமல்ல. ஒவ்வொரு அடியையும் அளந்து அளந்து அடைய வேண்டிய சிகரம் அது! அந்த சிகரம் தொட சில விஷயங்களை நாம் சரியாகச் செய்தாக வேண்டும். ஒரு தொழில்முனைவோர் நிச்சயமாக வெற்றி பெற எந்தெந்த விஷயங்களை சரியாகச் செய்யவேண்டும், எதில் அதிகக் கவனமாக இருக்கவேண்டும் என்பது குறித்த பட்டியல் இதோ.

1. தனித்தன்மை


 நீங்கள் ஆரம்பிக்கும் பிசினெஸ் தனித்தன்மையுடன் உள்ளதா என்பதை முதலில் உறுதி செய்யுங்கள்.  மனிதன் ஒவ்வொருவரும் தனித்தன்மை உடையவன். ஒருவர் மாதிரி இன்னொருவர் இருப்பதில்லை. ஒவ்வொருவரிடத்திலும் ஒரு தனித்தன்மை ஜொலிக்கவே செய்கிறது. ஆனால் பிஸினஸ் என்று வரும்போது நமக்கிருக்கும் தனித்தன்மையை சுத்தமாக மறந்துவிட்டு, சுற்றும்முற்றும் பார்த்து 'காப்பி' அடிக்கிறோம்.

உங்கள் ஏரியாவில் நிறைய  மளிகை கடை இருக்கின்றதென்று நீங்களும் ஒரு மளிகைக்கடையை  திறந்தால் அது பத்தோடு பதினொன்றாகத்தான் இருக்கும். ஏற்கெனவே ஒரு பிஸினஸூக்குப் போட்டியாக இன்னொன்றை நீங்கள் ஏன் தொடங்க வேண்டும்? போட்டியே இல்லாத ஒரு புதிய பிஸினஸை ஆரம்பித்தால்தான் உங்களுக்கான வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

2. போதிய அளவு முதலீடு.

இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, போதிய அளவு பணம் இல்லாமல் பிஸினஸில் ஈடுபடாதீர்கள் இதற்காக, என்னிடம் பணமில்லை, எனவே நான் எப்படித் தொழிலை தொடர்வது என்று மலைக்க வேண்டாம். பணம் உங்களுடையதாக இருக்கலாம் அல்லது வங்கியில் கடன் வாங்கியதாக இருக்கலாம்;  பிரச்னைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் உங்கள் கையில் பணம் இருக்கவேண்டும்.

நீங்கள் செய்யும் பிஸினஸில் அதிக லாபம் வரலாம்; ஆனால் கையில் போதிய பணம் இல்லை என்றால் உங்களால் நீண்ட நாளைக்கு பிஸினஸில் தாக்குப் பிடிக்கமுடியாது. ஆனால் உங்கள் பிஸினஸில் லாபம் இல்லை என்றாலும், கையில் பணம் இருந்தால் நீண்ட நாளைக்கு உங்களால் பிஸினஸ் செய்யமுடியும். உங்களிடம் இருக்கும் பணப்புழக்கமே உங்கள் நம்பகதன்மையை அதிகரிக்கச் செய்யும். வங்கிகளும் மற்ற நிதி நிறுவனங்களும் உங்களுக்கு இன்னும் கடன் கொடுக்க முன்வரும்.

3. பணப்புழக்கம்.

நீங்கள் ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் கையில் பணப்புழக்கம் இல்லாவிட்டால்  எந்தப் பிரயோஜனமும் இல்லை. உங்கள் நிறுவனத்தில் பணப்புழக்கம் இருக்கிறதா, இல்லையா என்பதுதான் முக்கியம். அது மட்டுமே யதார்த்தம், மற்றதெல்லாம் மாயை. பெரும்பாலான தொழில்முனைவோர்கள் பணப்புழக்கத்தில் அதிக அக்கறை செலுத்துவதில்லை. அதிகப் பணப்புழக்கம் உள்ள நிறுவனங்கள் மட்டுமே அடுத்து என்ன, என்ன என்று யோசிக்கிறது.

4. வாடிக்கையாளர் தொடர்பு.

ஒரு நல்ல பிஸினஸ்மேனுக்கு அழகு, வாடிக்கை யாளர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பது. உங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்று கேட்டறிந்து அந்தச் சேவையையோ அல்லது பொருளையோ கொடுத்தால் அவர்கள் உங்களை விட்டு வேறு இடத்துக்குப் போகவே மாட்டார்கள். 

புதிய வாடிக்கையாளர்களை உருவாக்குவதைவிட ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிகம் விற்பது லாபகரமாக இருக்கும். அவர்கள் உங்களுக்கு புதிய வாடிக்கையாளர்களைக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

5. எண்களைக் கவனித்தல்.

உங்கள் நிறுவனத்தின் எண்களை எப்போதும் துல்லியமாக ஞாபகம் வைத்திருங்கள். விற்பனை, லாபம், கடன், நிறுவனம் எப்போது பிரேக் ஈவன் (Break even) அடையும் என்பது போன்ற விஷயங்களை குழப்பமில்லாமல் தெரிந்து வைத்திருங்கள். 

உங்கள் பிஸினஸ் எப்போது பிரேக் ஈவன் அடையும் என்று உங்களுக்குத் தெரிந்தால்தான் தேவையான பணப் புழக்கத்தை உங்களால் கொண்டு வரமுடியும். பணப்புழக்கம் இருந்தால்தான் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க முடியும். 

ஆனால் பிரேக் ஈவன் அடைவது மட்டுமே உங்கள் லட்சியமாக இருக்கக்கூடாது. அது குறைந்த பட்ச இலக்கு. லாபமும் நஷ்டமும் இல்லாத ஒரு நிலைதான் அது. அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நீங்கள் தொடர்ந்து முன்னேறித்தான் ஆகவேண்டும்.

6. ஆலோசகர்கள் தொடர்பு.

உங்கள் நலன் விரும்பும் ஆலோசகர்களையும் நலன் விரும்பிகளையும் அதிகரித்துக் கொண்டே இருங்கள். ஏற்கெனவே பிஸினஸில் இருப்பவர் களிடம் தொடர்பில் இருங்கள். அவர்களிடம் அடிக்கடி பேசுங்கள். அவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். அது சம்பந்தமாக பயனுள்ள கருத்துக்களை அவர்கள் சொல்வார்கள். 

வெற்றியடைந்த தொழிலதிபர்கள் வளர்ந்து வரும் தொழில்முனைவோர்களை நிச்சயம் ஊக்கப்படுத்து வார்கள். அவர்களைப் போன்றவர்களிடம் உதவி கேட்கத் தயங்காதீர்கள். ஒருவேளை அவர்கள் இல்லை என்று சொன்னால்கூட அதனால் பெரிய பாதிப்பு உங்களுக்கு வந்துவிடாது.

7. வாடிக்கையாளர்கள் பார்வையில் சிந்தித்தல்.

எப்போதும் வாடிக்கையாளர் பார்வையில் பிஸினஸை சிந்தியுங்கள்.  நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்ன கொடுக்க விரும்புகிறீர்கள் என்பதைவிட வாடிக்கையாளர்கள் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க் கிறார்கள் என்பதே முக்கியம்.

8. திட்டமிடுதல்.

ஐந்தாண்டுகளுக்கு பிறகு உங்கள் நிறுவனம் எப்படி இருக்கவேண்டும் என்று இப்போதே திட்டமிடுங்கள், கனவு காணுங்கள். இந்த கனவு உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும். உங்கள் கனவை உங்கள் பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

அந்த கனவு நோக்கிச் செல்ல அவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள். உங்கள் கனவு யதார்த்தத்தில் நடக்காது என்று சொன்னால் அதற்காக கவலைப்படாதீர்கள். பிஸினஸ் உலகில் எல்லா கனவுகளும் சாத்தியம்தான்.

9. திரும்பிப் பார்த்தல்.

நீங்கள் கடந்து வந்த பாதையை அடிக்கடி திரும்பிப் பாருங்கள். அதாவது, உங்கள் கணக்கு வழக்குகளைத் திருப்பிப் பாருங்கள். இதை எப்போதும் தவிர்க்காதீர்கள். 


10. ஒரே சிந்தனை

மற்ற பிஸினஸ்களில் இருந்து உங்கள் பிஸினஸை எப்படி வித்தியாசப்படுத்துவது என்பது பற்றி சிந்தித்துக் கொண்டே இருங்கள். இந்த தனித்தன்மையான சிந்தனைதான் போட்டி இல்லாத நிலையை உருவாக்கும்.

Tuesday, April 17, 2012

ஒரு கம்பெனியை ஆரம்பித்து, அதன் பெயரை அரசிடம் பதிவு செய்ய என்ன செய்யவேண்டும்?


 இதற்கென்று தனி விண்ணப்பம் இருக்கிறது. மத்திய அரசின் கம்பெனி நிர்வாகத் துறையின் இணைய தளத்தில் கிடைக்கும். விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய். விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையத்திலேயே பூர்த்தி செய்து அனுப்பி வைக்கவேண்டும். விண்ணப்பிக்கும்போது நிறுவனத்துக்கு நான்கு பெயர்களைக் குறிப்பிட வேண்டும்.

அந்த பெயர்கள் ஏற்கெனவே பதிவு செய்யாத பெயர்களாக இருந்தால் நான்கில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளலாம். நான்கில் ஏதேனும் ஒன்றிரண்டு பதிவு செய்திருந்தால் அதை விட்டுவிட்டு மீதமுள்ளவற்றில் தேர்வு செய்துகொள்ளலாம்.

மேலும் மெமராண்டம் ஆஃப் அசோஸியேஷன், ஆர்டிக்கிள்ஸ் ஆஃப் அசோஸியேஷன் போன்ற முக்கியமான டாகுமென்டுகள் இணைக்கப்படவேண்டும். இதில் கம்பெனியின் நோக்கம் என்ன, எந்த வகையானது, எவ்வளவு முதலீடு, நிறுவனம் அமைய உள்ள இடம், பிரைவேட் நிறுவனமா, பப்ளிக் நிறுவனமா என்பன போன்ற தகவல்களை எல்லாம் தரவேண்டும்.

உங்களுடைய நோக்கமும், இதர விஷயங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் ஒரே வாரத்தில் பதிவு செய்வதற்கான தகவலை ரிஜிஸ்ட்ரேஷன் ஆஃப் கம்பெனியில் இருந்து அனுப்பி வைப்பார்கள். நாம் தந்த தகவல்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் திருத்தம் செய்து அனுப்பி வைக்கவேண்டும்.
பிரைவேட் லிமிடெட் நிறுவனம் என்றால் ஒரு லட்சம் ரூபாய் முதலீடாகவும், பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக இருந்தால் ஐந்து லட்சம் ரூபாய் முதலீடாகவும் இருக்கவேண்டும்.

முதலீடு எந்தளவுக்கு என்பதைப் பொறுத்து பதிவுக் கட்டணம் மாறுபடும். பெயரைப் பதிவு செய்த இரண்டு மாதத்துக்குள் நிறுவனத்தைப் பதிவு செய்யவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: http://india.gov.in/howdo/otherservice_details.php?service=19



தொழிலுக்கான ஆரம்ப கட்ட முதலீட்டை திரட்டுவது எப்படி?

ஞ்சல் முதலீட்டாளர்கள்யார்?

ஆரம்ப நிலை கம்பெனிகளில், பங்குகளிலோ அல்லது அதைச் சார்ந்த பத்திரங்களிலோ முதலீடு செய்யும் பணக்கார முதலீட்டாளர்களையே 'ஏஞ்சல் இன்வெஸ்டர்ஸ்' என்று சொல்கிறோம்.


 ஏஞ்சல் முதலீட்டாளர்கள்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது வகையினர், பிஸினஸ் ஏஞ்சல்கள். இவ்வகை முதலீட்டாளர்கள் பரம்பரை பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. சாதாரண நிலைமையில் பிறந்து, பின்னர் தொழில்முனைவராக உருவெடுத்து, அதில் அபார வெற்றி பெற்று, பேரும், புகழும், பணமும் சம்பாதித்தவர்கள். ஆரம்பநிலை நிறுவனங்கள் நிதி திரட்டுவது கடினம். பொருள் திரட்ட முடியாத காரணத்தால் பல இளம் தொழில்முனைவர்கள் தங்கள் முயற்சியை கைவிட்டதுண்டு. தாங்கள்பட்ட கஷ்டத்தை மற்றவர்களும் படக்கூடாது என்பதற்காக, வருங்கால தொழில்முனைபவருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்பதே இத்தகைய பிஸினஸ் ஏஞ்சல்களின் நோக்கம்.

தொழில் முனைந்து, அதை நன்கு வளர்ச்சி அடையச் செய்த ஆழ்ந்த அனுபவத்தால், பிஸினஸின் வளர்ச்சிப் பாதை யில் ஏற்படுகிற சிக்கல்களைப் பற்றியும், அதை அணுகுகிற முறை பற்றியும் இவர்கள் நன்கு அறிவார்கள். இவ்வகை முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதோடு மட்டும் நின்று விடுவதில்லை. முதலீடு செய்தபின் அந்நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு தேவையான உதவி களை முடிந்தவரை செய்ய விருப்பப்படுவார்கள்.
 
இரண்டாவது வகையினர், ஃபைனான்ஷியல் ஏஞ்சல்கள். இவர்கள் பெரும்பாலும் முனைப்பற்ற முதலீட்டாளர்களாகவே இருப்பார்கள். முதலீடு செய்த நிறுவனத்தில் பிஸினஸ் ஏஞ்சல்கள்  போன்று அவ்வளவு ஈடுபாடு காட்டமாட்டார்கள். அதற்கான நேரமோ அல்லது அனுபவமோ அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம். இவ்வகை முதலீட்டாளர்கள் உரிமையாளரின் திறனின் மேல் உள்ள முழுநம்பிக்கையின் பேரில்தான் முதலீடு செய்கிறார்கள். அதனால், நன்கு பரிச்சயமான நண்பர்கள் தொடங்கும் தொழிலிலோ அல்லது நெருங்கிய நண்பர் களின் சிபாரிசின்பேரில் வரும் கம்பெனிகளிலோ மட்டும்தான் முதலீடு செய்வார்கள்.

என்ன வித்தியாசம்!

ஞ்சல் முதலீட்டாளர்களுக்கும் வங்கிக் கடனுக்கும் சில வித்தியாசங்கள் உண்டு.


  • வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் தந்த வைப்பு நிதியை, கடனாக தருகின்றன. ஆனால், ஏஞ்சல் முதலீட்டாளர்களோ தங்கள் சொந்த பணத்தை முதலீடு செய்கிறார்கள். அதனால், அவர்கள் நிதி தருவதற்கு முன் தீர்க்கமாக விசாரித்தே தருவார்கள்.
  • முதலீடு செய்யும் கம்பெனிகளை தேர்வு செய்வதில் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மிக கவனமாக இருப்பார்கள். உதாரணமாக, 'சென்னை ஏஞ்சல்ஸ்’ ஆரம்பித்த முதல் மூன்று வருடங்களில் ஐந்து நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்துள்ளது. ஆனால், வங்கிகள் கடன் கொடுப்பதோ இதைக் காட்டிலும் சற்று தாராளமாகவே இருக்கும்.
  • ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து ஒரு சுற்றில் திரட்டும் நிதி சராசரியாக 20 லட்சத்தைத் தாண்டாது. வங்கிகளிடமிருந்தோ இன்னும் அதிக அளவில் கடன் பெறலாம்.

ஒரு காலத்தில்  ஏஞ்சல் முதலீட்டாளர்கள் என்பவர் யார், அவர்களை எப்படி அணுகுவது? போன்ற கேள்விகளுக்கு எளிதில் பதில் கிடைக்காது. ஆனால், கடந்த சில வருடங்களில் பல ஏஞ்சல் முதலீட்டாளர்கள் இணையதளம் மூலம் தங்கள் முதலீடு செய்யும் நோக்கத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு சில ஏஞ்சல் முதலீட்டாளர்களின் இன்வெஸ்டர்ஸ் இணையதள விவரங்கள் இதோ:

Monday, April 16, 2012

பிளே ஸ்கூல் தொடங்குவது லாபகரமானதா?



கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக அருமையான வாய்ப்பைப் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு, எதில் முதலீடு செய்யலாம் என்று வேறெங்கெங்கோ தேடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த அருமையான வாய்ப்பு வேறெதுவும் இல்லை, கல்வித் துறைதான். கோடிகளில் முதலீடுகள் குவியும் ஒரு முக்கியத் துறையாக அது மாறியிருக்கிறது. கல்வித் துறையில் சூப்பரான பல வாய்ப்புகள் இருக்கின்றன. சில ஆச்சரியமான புள்ளிவிவரங்கள்...
  • இந்தியா முழுக்க இருக்கும் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 9.5 லட்சம்.
  • தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 2.4 லட்சம்.
  • அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 10 கோடி.
  • தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 10 கோடி.
  • சுமார் 14 கோடி குழந்தைகள் ஆரம்ப மற்றும் உயர்கல்வி கிடைக்காத நிலையில் இருக்கின்றனர்.
  • 30 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 14.40 லட்சம் கோடி) மதிப்பு கொண்ட இந்திய கல்வித்துறை அடுத்து பத்து ஆண்டுகளில் 70 பில்லியன் டாலர் கொண்ட துறையாக வளரப் போகிறது!
மேற்சொன்ன இந்த புள்ளிவிவரங்களை மேலோட்டமாகக் கவனித்தாலே போதும், இந்திய கல்வித் துறையின் மார்க்கெட் எவ்வளவு பெரிது என்பது உங்களுக்குப் புரிந்துவிடும்.

இன்றைய கால கட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்வதால் பிளே ஸ்கூலுக்கு நல்ல தேவை உள்ளது.  நாமாக தொடங்குவதை விட பெரிய பிராண்டுகளின் பிரன்சைசீ ஆக தொடங்கினால் தொழிலை கற்றுகொள்வது எளிது.

இன்னும் அதிக விவரங்களுக்கு  இந்த லிங்கில் உள்ள எலெக்ட்ரானிக் புத்தகத்தை டவுன்லோட் செய்து கொள்ளவும்.

பிளே ஸ்கூல் தொடங்குவது எப்படி?


மில்லியன் டாலர் ஹோம் பேஜ்

மில்லியன் டாலர் ஹோம் பேஜ் 


http://www.milliondollarhomepage.com

மாற்று  சிந்தனை ( லேட்ரல் திங்கிங்) என்பது இல்லாத ஒன்றை கண்டு பிடிப்பது அல்ல. நமது சிந்தனையை கொஞ்சம் மாற்றுவது. பார்வை கோணத்தில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் சிறிய பிரச்சனைகளை மட்டுமல்ல, மிகப்பெரிய சமூக கோளாறுகளை கூட தீர்க்க முடியும். சில் நேரங்களில் நாம் அற்பமாக நினைக்கும் தீர்வு கூட மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இங்கிலாந்தை சேர்ந்த அலெக்சுக்கு ஒரு மில்லியனர் ஆக வேண்டுமென்பது நீண்டநாள் கனவு. லேட்டஸ்ட் டெக்னாலஜி மூலம் எப்படி பணக்காரன் ஆகலாம் என்று யோசித்த அலெக்ஸ் செய்தது ஒன்றே ஒன்றுதான். அவர் செய்ததெல்லாம் ஒரு இணைய தளத்தை உருவாக்கியது தான். இணைய தளத்தின் இடத்தை பத்து லட்சம் சிறிய கட்டங்களாக பிரித்த அலெக்ஸ், ஒவ்வொரு கட்டமும் ஒரு டாலர் என்று விற்க ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் மந்தமாக இருந்தாலும், புதுமையான விளம்பர உத்தியாக இருகின்றதே என்று, பெரிய நிறுவனங்கள் சில பிக்சல்களை பதிவு செய்து விளம்பரம் செய்ய முன் வந்தன. வாய்வழி தகவல்கள் மூலம், இந்த தளத்திற்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க, சில மாதங்களில் எல்லா கட்டங்களும் விற்று தீர்ந்தன. மிகக் குறுகிய காலத்தில் 1 மில்லியன் (4500000 ரூபாய்) சம்பாதித்து மில்லியனர்  ஆனார் 21 வயதே ஆன அலெக்ஸ்.

அலெக்சுக்கு தோன்றிய இந்த சிந்தனை நமக்கும் தோன்றும், அனால் நாம் அதை அற்பமாக நினைத்து செயல் படுத்த தயங்குவோம். அனால் அதை செயல் படுத்தியது தான் அவரை மில்லியனர் ஆக்கியது.
http://www.milliondollarhomepage.com

நாமும் தீர்வை தேடும் போது பார்வை கோணத்தை மாற்றி சிந்திப்போம். 

டான்ஸ்டியா தரும் சுயதொழில் பயிற்சிகள்

http://www.tanstiafnf.com/

தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவர் அனைவருக்கும் டான்ஸ்டியா பற்றி தெரிந்திருக்கும். இது தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவர்களுக்கும், வங்கிகளுக்கும் மற்றும் அரசுக்கும் பாலமாக விளங்குகின்றது. தமிழகம் முழுவதும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தி வருகின்றது.
 
ரூபாய் 100 கட்டணத்தில், திட்ட அறிக்கை கொடுக்கும் இந்த நிறுவனம் பல லாபகரமான துறைகளை தேர்ந்தெடுத்து ( தையல், தோல் பொருள்கள், தகவல் தொழில் நுட்பம் மற்றும் பல) பயிற்சி அளித்து தொழில் முனைவர்களை ஊக்குவித்து வருகின்றது.

டான்ஸ்டியாவின் இணையதளம் :
http://www.tanstiafnf.com

Sunday, April 15, 2012

ஏற்றுமதி செய்யப் போகும் கம்பெனியின் ஜாதகத்தை அறிய!!

இண்டர்நெட்டில் பல சமயங்களில் தகவல்கள் இலவசமாக கிடைத்தாலும், தகவல்கள் நம்ப தகுந்ததா என்ற சந்தேகம் பலருக்கு வரும். அதுவும் வெளிநாட்டில் உள்ள கம்பெனிகளை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நம்பிக்கையான இணையதளம் வேண்டும்.

இந்த இணையதளம் உலகத்தின் 50 மில்லியன் கம்பெனிகளுடைய தகவல்களை திரட்டி வைத்திருக்கிறது.  உங்களுக்கு ஒரு கம்பெனி ஆர்டர் கொடுத்து அந்த கம்பெனி நல்ல கம்பெனியா என்று தெரிந்து கொள்ள உதவும் இந்த இணையதளம்.

ஏற்றுமதியாளர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வலைத்தளம் இது.

http://www.skyminder.com/

Saturday, April 14, 2012

யார் தவறு?



ரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் கட்டுப்பாடே  இல்லாமல் லீவு எடுக்கிறார்கள். வெட்டி அரட்டை அடிக்கிறார்கள். இது யார் தவறு? தொழிலாளர்கள் தவறா, மேனேஜர் தவறா?

கி.மு. 500 காலகட்டத்தில் சீனாவில் வாழ்ந்த சன் ஸூ (Sun Tzu), யுத்தம் தொடர்பான ராஜதந்திரங்களில் மாமேதை. இவர் எழுதிய யுத்தக் கலை (Art of War) புத்தகத்தில் மேற் சொன்ன பிரச்னைக்கு தீர்வு சொல்கிறார்.

180 பெண்களுக்கு போர்ப் பயிற்சிகள் கொடுத்தார் சன் ஸூ. 90 பேர் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரித்தார். பயிற்சிகள் முடிந்தவுடன், போட்டிகள் நடந்தன. இரண்டாம் அணியைச் சேர்ந்த பெரும்பாலானோர் செமையாகச் சொதப்பினார்கள்.

திறமையுடன் விளையாடிய முதல் அணியின் வீரர்கள் பாராட்டப்பட்டனர். இரண்டாம் அணி வீரர்களுக்குத் தண்டனை அளிக்கத் தயாரானார் அரசர். உடனே தடுத்தார் சன் ஸூ.

'மன்னரே, இரண்டாம் அணியில் எல்லோருமே தவறு செய்தார்கள். ஆக, அது அவர்கள் தவறல்ல, தலைமையின் தவறுதான். எனவே, தலைமைக்குத்தான் தண்டனை தரவேண்டும்!'' என்றார். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே, யார் தவறு என்று?


The Art of War by Sun Tzu