Thursday, May 10, 2012

ஆயிரம் மரம் வைத்த அபூர்வ திம்மக்கா!

'சாலு மரத திம்மக்கா’ என்றால், கர்நாடகாவுக்கே தெரியும்! எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில்... இன்று சாலை நெடுக இருபுறங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலமரங்கள் சலசலக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கூதூர் வரை நீளும் சுமார் 20 கிலோ மீட்டர் சாலை முழுக்க வரிசையாக (சாலுத) நின்று, ஊருக்கே நிழலாற்றும் அம்மரங்களை நட்டு வளர்த்த திம்மக்கா பாட்டிக்கு இப்போது வயது... 101!

இந்த பசுமைச் சேவைக்காக... சிறந்த தேசியக் குடிமகன் விருது, நான்கு குடியரசுத் தலைவர்களின் கையால் பெற்ற விருதுகள், மூன்று பிரதமர்களிடமிருந்து பெற்ற விருதுகள், பல முதலமைச்சர்கள் அதிசயித்து அளித்த மாநில விருதுகள், தன்னார்வ, பெண் நல நிறுவனங்கள் வழங்கிய விருதுகள், பட்டங்கள் என குவித்திருக்கும் திம்மக்கா பாட்டியின் கூதூர் கிராமம் இருப்பது... செல்போன் சிக்னல்கூட கிடைக்காத, பெங்களூரு ஊரக மாவட்டமான மாகடி தாலுகாவில்!

பயணம் நெடுகிலும் திம்மக்கா பாட்டி வளர்த்திருக்கும் ஆலமரங்கள் தலையசைத்து வரவேற்கின்றன. வாசலில் நம்மைக் கண்டவுடன், முந்தானையில் முடிந்திருந்த கசங்கிய 10 ரூபாய் நோட்டைக் கொடுத்து, டீ வாங்கிவர ஆள் அனுப்புகிறார். உடனடியாகக் குளித்து, விபூதி பூசி, பளிச்சென அணிந்து சிரிக்கிறார்... ஐந்து நிமிடங்களுக்குள்!

''ஏழைக் குடும்பத்துல பிறந்தவ நான். 16 வயசுல, என் எசமான் சிக்கையா கையில புடிச்சுக் கொடுத்துட்டாங்க. பேகூர்ல இருந்து கூதூருக்கு வந்துட்டோம். கல்யாணமாகி 10 வருஷம் ஆகியும், குழந்தை எதுவும் உண்டாகல. ஏறாத கோயில் இல்லை. விரதம் இருந்தே உடம்பு வீணா போச்சு. அக்கம்பக்கம் ஜாடை மாடையா பேசின பேச்சு, உயிரை வதைச்சுது. காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் காட்டுல உழைச்சுட்டு வீடு வந்தா, சோறு இறங்காது... நிம்மதியான தூக்கமும் இருக்காது. ஒரு கட்டத்துல தூக்கு மாட்டிக்கலாம்னு நினைக்கற அளவுக்கு மனசு வெறுத்துட்டேன்''
- இதைச் சொல்லும்போது, இந்த 101 வயதிலும் கண்கள் இடுங்குகின்றன.
''வயித்துல சுமந்து வளர்க்கறது மட்டும்தான் உசுரா..? ஆண்டவன் படைப்புல ஆடு, மாடு, மரம், செடினு எல்லாமே உயிருதான்ங்கிற உண்மையை, அப்போ என் மனசு தவிச்ச தவிப்பு மூலமா உணர்ந்தேன்.

'குழி பறிச்சு, கன்று நட்டு, தண்ணிவிட்டு... அந்தச் செடியையே புள்ளையா வளர்ப்போம். ஊர்ல எல்லாரோட புள்ளைகளும் அவுங்கவங்க அப்பன், ஆத்தாவைத்தான் பார்த்துக்குவாங்க. ஆனா, என் புள்ளைங்க வளர்ந்து, இந்த ஆத்தாவுக்கு மட்டுமில்ல... ஊருக்கே நிழல் கொடுக்கும்’னு என் மனசுக்கு ஒரு தெளிவு கிடைச்சுது.

இந்த கூதூர் முழுக்க பொட்டல் காடுதான். வெக்கையா தகிக்கும். ரோட்டோர சுமைதாங்கிக் கல் பக்கத்துல ஒரு ஆலங்கன்று நட்டு வளர்த்தேன். ஆரம்பத்துல, 'இது என்னாடி கிறுக்குத்தனம்?’னு கோபப்பட்டார் என் எசமான். ஆனா... அந்தச் செடி வேர் பிடிச்சு, இலை துளிர்த்து வளர்ந்தப்போ... வயிறு குளிர்ந்து, மனசு குளிர்ந்து நான் அடைஞ்ச சந்தோஷத்தை ரசிச்சவர், அதுக்குப் பிறகு மரம் நடுற வேலைகள்ல எனக்கு உதவிகள் செய்ய ஆரம்பிச்சார்!

காடு, மேடுனு அலைஞ்சி, திரிஞ்சி நிறைய ஆலமரக் கன்றுகளா கொண்டு வந்து, பதியம் போட்டு வளர்த்து, கொஞ்சம் பெருசானதும், ரோட்டோரத்துல குழி தோண்டி நட்டோம். இப்படி ஆலமரக் கன்றுகளா நட்டுட்டே இருந்தோம். மழை வரும்போதே குழிவெட்டி சேமிச்சாதான் தண்ணி. அப்படி சேர்ந்த தண்ணியை கிணத்துல, குளத்துல இருந்து எடுத்துட்டு வந்து நானும் எசமானும் கஷ்டம் பார்க்காம ஊத்தி ஊத்தி வளர்த்தோம்.

ஒரு தடவை குடிக்கக்கூட தண்ணி இல்லாத அளவுக்கு பஞ்சம். பக்கத்து ஊர்ல இருந்து ஆளுக்கு ரெண்டு மண்பானையில தண்ணி எடுத்துட்டு வந்து செடிகளுக்கு ஊத்தினோம். சுடுவெயில்ல தலையில ஒண்ணு, இடுப்புல ஒண்ணுனு ரெண்டு பானையோட வரும்போது, கல் தடுக்கி விழுந்து, முட்டியில ரத்தம். கீழ கிடந்து அழ ஆரம்பிச்சுட்டேன். 'சரியாயிடும்’னு என் எசமான் பதறிக் கட்டுப்போட, 'தண்ணியெல்லாம் கொட்டிப் போச்சேனுதான் அழுவறேன்’னு நான் சொல்ல, கண்கலங்கிட்டார்!''

- நாமும் கலங்கித்தான் போனோம்.

''அப்படி நாங்க அரும்பாடுபட்டு வளர்த்த ஆயிரம் மரங்கள்தான், இன்னிக்கு உயர வளர்ந்து ஒய்யாரமா நிக்குது. இந்தப் பொட்டல் காட்டுக்கு வர்ற சாலையைச் சோலையாக்கித் தந்திருக்கு. தன் காலடியில கிடக்கிற அத்தனை பேருக்கும் நிழல் தருது. ஊரோட வெம்மையைத் தணிச்சு, குளிர்ந்த காத்தைக் கடத்துது. 'மரத்தை வெச்ச மகராசி, நீ நல்லா இருக்கணும்!’னு சனங்க எல்லாம் சொல்லும்போது, நல்ல புள்ளையைப் பெத்த புண்ணியவதி மனசு குளிர்ற மாதிரி, என் மனசும் குளிர்ந்து போகுது!''

- திம்மாக்காவின் வார்த்தைகளை, சுற்றி நின்ற ஊர்க்கூட்டம் நன்றியும், நெகிழ்ச்சியுமாக ஆமோதித்தது !

திம்மக்கா பாட்டியின் கணவர் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட, இப்போது முதுமையில், தனிமையில் இருக்கிறார் பாட்டி. ஆனால்... சர்க்கரை, ரத்த அழுத்தம் என எந்த நோயும் இல்லை. கண் பார்வை அத்தனை துல்லியம். டெலிபோனில் பேசுமளவுக்கு கேட்கும் ஆற்றல்.

அவருடன் நடந்தால் மூச்சு வாங்குகிறது நமக்கு. அரசாங்கம் வழங்கும் முதியோர் நலத்திட்டத் தொகையான 500 ரூபாயை மட்டுமே ஆதார வருமானம். வாசலில் சாணி தெளிப்பது முதல் சமையல் வரை வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்கிறார் இந்த 101 வயதிலும்!

''ஊர்ல இருந்து டவுன் ரொம்ப தூரம்ங்கறதால, அவசர ஆத்திரத்துக்கு மருத்துவ உதவி இல்ல; பிரசவத்துக்குப் போற பொண்ணுங்க ரொம்ப சிரமப்படுறாங்க. எனக்கு பெங்களூருல, கவர்மென்ட் வீடு கொடுத்துருக்கு. ஆனா, அதை நான் பார்த்ததுகூட கிடையாது. அதெல்லாம் எனக்கு தேவையில்ல... எங்க ஊருல ஆஸ்பத்திரி கட்டிக்கொடுத்தா போதும்!'' என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் இந்த 'செஞ்சுரி' பாட்டி... ஓர் ஆச்சர்யக்குறிதான்!’

( நன்றி - விகடன் இதழ் )

இவரைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு:

http://en.wikipedia.org/wiki/Saalumarada_Thimmakka
http://www.outlookindia.com/article.aspx?207401
http://www.hindu.com/2007/04/26/stories/2007042608260200.htm




Wednesday, May 9, 2012

வாகன உரிமையாளரை சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!

 
ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.

மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை உடனே அடையாளம் கண்டுகொள்ள உதவும்.

092123 57123 என்ற எண்ணுக்கு vahan <space> <regn number without space>- வாகனத்தின் பதிவு எண்ணை இடைவெளியின்றி டைப் செய்து அனுப்பினால், அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய எஸ்.எம்.எஸ். வந்துவிடும்.

இந்த வசதி 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அல்லது, 2003-ம் ஆண்டுக்குப் பிறகு ஏதாவது ஒரு காரணத்துக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வாகனம் சென்றிருக்க வேண்டும்.
 
 

Thursday, May 3, 2012

வென்ச்சர் கேப்பிட்டல் பற்றி தெரியுமா?

கலைஞர் ஸ்டைலில் வென்ச்சர் கேப்பிட்டல்  பற்றி ஒரு கேள்வி-பதில் பதிவு


 வென்ச்சர் கேப்பிட்டல் என்றால் என்ன?

புதுமையான தொழில்நுட்பமும் லாப நோக்கில் வேகமாக வளரக்கூடிய வளர்ச்சியும் கொண்ட ஒரு தொழிலுக்கு  தேவையான முதலீட்டைக் கொடுப்பதுதான் வென்ச்சர் கேப்பிட்டல். பொதுவாக இவர்களில் இரண்டு வகை உண்டு. அமைப்பு சார்ந்த முதலீட்டாளர்கள் என்பது ஒருவகை. தனிநபர்கள் அதாவது பெரும் பணக்காரர்கள் என்பது இன்னொரு வகை. முதல்வகையில் பல தனிநபர்கள் ஒன்று சேர்ந்து ஓர் அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் பணத்தை முதலீடு செய்வார்கள். இரண்டாவது வகையில் ஒரு பணக்காரர் மட்டும், தனக்குச் சரியென்று படும் திட்டத்தில் முதலீடு செய்வார். இரண்டாவது வகையைவிட முதல் வகையைச் சேர்ந்த நிறுவனங்களே வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்களே அதிகம்.

வங்கியைப் போன்று தொழிலுக்குக் கடன் கொடுப்பவரா?

இல்லை.  வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் முதலீடு செய்யும் பணம் கடன் வகையைச் சேர்ந்தது அல்ல. வட்டியோடு அசலைக் கொடுத்து அவர்களின் கடனைக் கழித்துவிட முடியாது. அவர்கள் செய்யும்  முதலீட்டுக்கு  ஏற்ப  தொழிலை அவர்களுடன் பங்கு போட்டுக் கொடுக்கவேண்டும்.

வங்கிகளிலேயே கடன் வாங்கலாமே ஏன் வென்ச்சர் கேப்பிட்டல் முதலீட்டைத் தேடிப் போக வேண்டும்?

காரணம்,  வங்கிகள் கடன் கொடுக்க வேண்டுமானால் நம்மிடம் அடமானம் வைக்க சொத்து இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, நமக்கு 5 கோடி ரூபாய் தேவைப்பட்டால், அதற்கு ஈடான சொத்தை வங்கிகளிடம் அடமானம் வைக்க வேண்டும். நம்மிடம் சொத்து ஏதும் இல்லாவிட்டால் என்ன செய்வது?  மேலும் நம்மிடம் இருந்தும் சிறிது முதலீட்டை வங்கிகள் எதிபார்க்கும். இந்த நிலையில் நமது தொழில் திட்டம் நிச்சயம் ஜெயிக்கும் என்று ஒரு வென்ச்சர் கேப்பிட்டல் நினைத்தால் தேவையான பணத்தைக் கொடுக்கும். வங்கிகளில் கடன் கிடைக்குமா?

எவ்வளவு பணம் முதலீடு செய்வார்கள்?

குறைந்தது  2 முதல் சில நூறு கோடிகளைக்கூட கொடுக்கலாம். நமது  தொழிலுக்கு எவ்வளவு பணம் தேவை, இப்போது அது எந்த நிலையில் இருக்கிறது? அந்தத் தொழில் நிச்சயம் வெற்றி பெறுமா? பணம் கொடுக்கும் வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனத்தின் பணபலம் எப்படி என்கிற மாதிரி பல விஷயங்களைப் பொறுத்து கிடைக்கும் பணத்தின் அளவு மாறும்.


எப்போதெல்லாம் பணம் தருவார்கள் ?வென்ச்சர் கேப்பிட்டல்
நிறுவனங்கள் கிட்டத்தட்ட 6 படிநிலைகளில்  தொழிலில் முதலீடு செய்யலாம்.
  1. முதலாவது நிலையை ஏஞ்சல் ஃபண்டிங் ( Angel Funding )அல்லது சீட் கேப்பிட்டல் ( Seed Capital )என்று குறிப்பிடுவார்கள். nalla பிஸினஸ் ஐடியா இருந்தும் தொழில் தொடங்க  பணமில்லையே என்று ஏங்கித் தவிக்கும் ஒருவருக்கு தேவையான முதலீட்டைக் கொடுப்பதுதான் ஏஞ்சல் ஃபண்டிங். ஒரு தொழிலின் மிக ஆரம்ப கட்டம் இது.
    ஏஞ்சல் முதலீட்டளர்கள்  யார்?
  2. இரண்டாவது ஸ்டார்ட்-அப். ( Startup ) அதாவது, நாம் தயாரிக்கப் போகும் பொருளுக்கான சந்தையைக் கண்டுபிடித்து, அதை வளர்க்கத் தேவையான பணத்தைக் கொடுப்பதாகும். மார்கெட் ரிசர்ச் போன்றவை இதில் வரும்.
  3. மூன்றாவது நிலையை முதல் ரவுண்ட் முதலீடு என்கிறார்கள். ஒரு பொருளை உற்பத்தி செய்து, அதனை விற்பனை செய்வதற்குத் தேவையான பணத்தைக் கொடுப்பதுதான் இந்த நிலை.
  4. நான்காவது படியை இரண்டாவது ரவுண்ட் முதலீடு என்கிறார்கள். ஒரு தொழிலுக்குத் தேவையான நடைமுறை மூலதனத்தைக் (வொர்க்கிங் கேப்பிட்டலை) கொடுப்பது.
  5. ஐந்தாம் நிலையை மூன்றாவது ரவுண்ட் முதலீடு என்கிறார்கள். லாபம் சம்பாதிக்க ஆரம்பித்த ஒரு நிறுவனம், தன்னுடைய தொழிலை இன்னும் விரிவாக்கிக்கொள்ளச் செய்யப்படும் முதலீடு இது! இந்த நிலையில் செய்யப்படும் முதலீட்டை பலகனி முதலீடு ( Mezzanine பினன்சிங் ) என்றும் குறிப்பிடுகிறார்கள்.
  6. ஆறாவது படிநிலை என்பது இறுதிநிலை. நல்ல நிலையில் லாபம் சம்பாதிக்கும் ஒரு நிறுவனத்தை மேன்மேலும் விரிவாக்கவும் தொழில்நுட்ப விரிவாக்கத்துக்கும் தேவையான பணம் இந்த நிலையில் கொடுக்கப்படுகிறது. இதை பிரிட்ஜ் ஃபைனான்ஸிங் ( bridge financing )என்று சொல்வார்கள். ஒரு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனம் இந்த ஆறு படிநிலைகளில் எப்போது வேண்டுமானாலும் உள்ளே வரலாம்.

லாபத்தில் பங்கு வேண்டும் என்பதே வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் விதிக்கும் முக்கிய நிபந்தனை. நாம் செய்யும் தொழில் வருங்காலத்தில் இன்னும் பல மடங்காக செழித்து வளரும் என்று அந்த வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனம் நினைத்தால், முதலீட்டுப் பணத்தை நம் தொழிலிலேயே தொடர்ந்து வைத்திருக்கும். இல்லாவிட்டால் அவர்களுடைய பங்குகளை வேறு ஒரு நிறுவனத்திடம் லாபத்துக்கு விற்றுவிட்டு வெளியேறிவிடும்.

பிசினசில் அவர்களின் தலையீடு இருக்குமா?

பணத்தைப் போட்டுவிட்டு அவர்களின் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள் என்று நினைத்தால் தவறு. நமது  தொழிலில் அவர்கள் எத்தனை சதவிகிதம் முதலீடு செய்திருந்தாலும் அவர்களையும் உங்கள் நிர்வாகக் குழுவில் ( போர்டு )உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டாக வேண்டும். நாம்  தொழிலை எப்படிச் செய்யவேண்டும், எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும், விற்பனை எவ்வளவு இருக்க வேண்டும் என்கிற மாதிரியான அனைத்து விஷயங்களிலும் அவர்களின் ஆலோசனையைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். மாத இலக்குகளை நிர்ணயிப்பதிலும் கவனமாக இருப்பார்கள்.

வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனத்தை எப்படி அணுகுவது?

முதலீட்டுத் துறையில் அனுபவமுள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் அணுகுவது  நல்லது. நாமே  அணுகும்பட்சத்தில் தொழில் திட்டத்தை  தெளிவாக எடுத்துச் சொல்லும் திறமை இருக்கவேண்டும். தொழில் திட்டத்தை மிகச் சரியாக எடுத்துச் சொல்லும் பட்சத்தில் தேவையான முதலீடு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனத்திடமிருந்து கிடைக்க நிறைய வாய்ப்பிருக்கிறது

Wednesday, May 2, 2012

உபயோகமான வலைத்தளங்கள் - 4 : இலவச வைரஸ் பரிசோதனை



  1. இன்றைய இணையதளங்களில், எந்த தளத்தில் என்ன மோசமான வைரஸ் அல்லது திருடும் நோக்கம் கொண்ட புரோகிராம் இருக்கும் என நம்மால் கண்டறிய முடியவில்லை.
  2. பிரபல நிறுவனங்களின் இணைய தள முகவரிகளில் சிறிய மாற்றங்கள் செய்தும், அந்நிறுவனங்களின் இணைய தளங்களைப் போலவே பக்கங்களை வடிவமைத்தும், பல திருடர்கள் தங்கள் திருடும் புரோகிராம்களை நம் கம்ப்யூட்டருக்குள் அனுப்பி விடுகின்றனர்.
  3. இந்த சூழ்நிலையில், ஓர் இணைய தளம், இது போல தீங்கு எதுவும் இல்லாததுதானா என்று கண்டறிந்து கூறும் சேவையினை இலவசமாக நமக்குத் தருகிறது. இதன் வலைத்தள முகவரி : http://safeweb.norton.com/
  4. இதனைப் பயன்படுத்துவது மிக எளிது. இந்த தளம் சென்று, நீங்கள் சோதனை செய்து பார்க்க விரும்பும் தள முகவரியினை அப்படியே காப்பி செய்து, அதற்கான இடத்தில் பேஸ்ட்செய்தால், சில நொடிகளில் சோதனை முடிந்து நமக்கு அந்த தளத்தின் பாதுகாப்பு தன்மை குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.
  5. இப்போதெல்லாம், நீளமான தள முகவரிகளைச் சுருக்கி நமக்குத் தருகின்றனர். இதில் எந்த தளம் மோசமானது என்று கண்டறிவதும் எளிதான காரியம் அல்ல.

இலவச வைரஸ் சோதனை செய்து தரும் மற்ற இணைய தளங்கள் :

http://www.virustotal.com/



இந்ததளத்தில் யு.ஆர்.எல் மட்டுமல்லாது, சந்தேகத்திற்குரிய பைல்களையும் சோதனை செய்ய முடியும். மிகபெரிய நன்மை என்னவெனில், வைரஸ் சோதனை 44 பலதரப்பட்ட ஆன்டி-வைரஸ் சாப்ட்வேரில் செய்யப்படுகிறது எனவே சோதனை தவறாவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

http://virusscan.jotti.org/en



இந்ததளத்தில் சந்தேகத்திற்குரிய பைல்களை மட்டும்  சோதனை செய்ய முடியும்.இதிலும் சோதனை பலதரப்பட்ட ஆன்டி-வைரஸ் சாப்ட்வேரில் செய்யப்படுகிறது.